"நீட் ஒழிப்பு மட்டுமே நிரந்தரத் தீர்வு": டெல்லி மாணவர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் கருத்து!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடுமுழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய அளவிலான முறைகேடுகளை சாத்தியமாக்கும் வகையில் நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம்.
அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கு தலைமை தாங்கி, முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது. அது நீட் ஒழிப்பு.
மற்ற எந்த கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும். #நீட் தேர்வை தடை செய்யுங்கள் #மாணவர்களை காப்பாற்றுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

