அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது - அமைச்சர் மூர்த்தி
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/fda3c6e1c9c96c2d567b690993531889.jpg)
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. 10 சுற்றுக்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் ஒன்பதாவது சுற்று முடிவில் 710 காளைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. மதுரை கருப்பாயூரணி சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபிசித்தர் ஆகியோர் தலா பதினோரு காளைகளை அடக்கி சமநிலையில் இருந்தனர்.
பின்னர் இருவரும் 17காளைகளை பிடித்த நிலையில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்று கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இறுதி சுற்றுக்கான கடைசி ஐந்து நிமிடத்தில் அவிழ்க்கப்பட்ட மூன்று காளைகளில் ஒரு காளையை கார்த்திக் பிடித்தார். இறுதியில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அபிசித்தர் 2ஆம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் விதிமீறல் நடைபெற்றதாக குற்றம் சாட்டி அவர் பரிசு வாங்க வராமல் இருந்தார். இது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மூர்த்தி, விதிகளின் படியே போட்டி நடைபெற்றது. முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை.இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. விழா குழு முடிவின்படியே பரிசுகளை வழங்கியுள்ளோம். நாங்கள் யாரையும் ஏற்று இறக்கமாக பார்க்கவில்லை. அனைத்து வீரர்களும் எங்களுக்கு சமம். தகுதியானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.