பொறுப்பு டிஜிக்கு மருத்துவ விடுப்பு: அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு..!
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வெங்கட்ராமன் 15 நாள் மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபி பதவி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது..தற்போது அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பதவியில் உள்ளார்.
ஜி. வெங்கட்ராமன் விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பொறுப்புகள் நிர்வாக ரீதியாக பாதிக்கப்படக்கூடும் என்ற கணிப்பில், உடனடி மாற்றாக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக (DVAC Director) பணியாற்றி வரும் அபய்குமார் சிங் , தமிழக பொறுப்பு டிஜிபி பதவியை கூடுதலாக கவனிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், அபய்குமார் சிங் தற்காலிகமாக இரண்டு முக்கிய பொறுப்புகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள உள்ளார்.
இந்த மாற்றம் திடீரென அறிவிக்கப்பட்டதால், தமிழக அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக பொறுப்பு டிஜிபி பதவி கடந்த சில மாதங்களாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஜி. வெங்கட்ராமன் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள், பதவி நியமனம் குறித்த விமர்சனங்கள், தகுதி மற்றும் மூத்தத்துவ விவாதங்கள் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்ச்சியாக எழுந்தன. இந்நிலையில், அவரை திடீரென விடுவித்து, அபய்குமார் சிங்கை நியமித்தது இந்த சர்ச்சைகளுக்கு மேலும் தீனி போட்டுள்ளது.
காவல் துறையின் உள் வட்டாரங்களில், இந்த மாற்றம் “உடல்நலக் காரணம் மட்டுமா?” என்ற கேள்வியும் எழுகிறது. சிலர் இந்த மாற்றம் நிர்வாகத் தீர்மானமா அல்லது அரசியல் பின்னணியா என்பதை சந்தேகிக்கின்றனர். தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைதியாக இருந்தாலும், முக்கிய விசாரணைகள், ஊழல் தொடர்பான வழக்குகள் மற்றும் பல்வேறு உயர்மட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், பொறுப்பு டிஜிபி பதவியின் மாற்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.


