காரை விற்று HIV பாதித்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய யூடியூபர் ஆஃரிப்
![காரை விற்று HIV பாதித்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய யூடியூபர் ஆஃரிப்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/768900ff7a53780dd0cbf242eb71c3ae.jpg)
ஈரோட்டில், சென்னையை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது காரை விற்பனை செய்து அந்த பணத்தில், HIV தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 350 பேருக்கு தீபாவளிக்கு புத்தாடை வழங்கி மகிழ்வித்துள்ளார்.
உணவு சார்ந்த பதிவுகளை வெளியிடும் Food blogger, ஆரிப் ரஹ்மான். இவர் ஆஃரிப் மைண்ட் வாய்ஸ் என்ற யூடியூப் சேனல் நடத்திவருகிறார். ஈரோட்டில் உணர்வுகள் அமைப்புடன் இணைந்து, தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கி உள்ளார். அரசால் அடையாளம் காணப்பட்ட 153 குழந்தைகள், அவர்களது பாதுகாவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 353 நபர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. ஈரோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி கல்வி துறை முன்னாள் இயக்குனர் தேவராஜன், சுகாதார துறை துணை இயக்குனர் பிரமகுமாரி ஆகியோர் புத்தாடைகளை வழங்கினர்.
மலை கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக தனது காரை விற்பனை செய்து வைத்திருந்த தொகையில், தீபாவளிக்காக குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கி பரிசளித்ததாக கூறிய ஆரிப், அடுத்த கட்டமாக அரசின் அனுமதியுடன் இந்த குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத்தகைய குழந்தைகளை சமூகத்தில் புறக்கணிக்காமல் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் ஆரிப் கேட்டுக்கொண்டார். புத்தாடை பரிசளித்த யூ டியூபரை அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.