“மே 4 இதுவரை வரலாறு கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்திற்கான வெற்றியின் சாட்சியாக இருக்கும்”- ஆதவ் அர்ஜூனா
ஏப்ரல் 23 எப்படி இதுவரை வரலாறு காணாத வாக்குப்பதிவுக்கு சாட்சியாக இருந்ததோ அதேபோல் மே 4, இதுவரை வரலாறு கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்திற்கான வெற்றியின் சாட்சியாக இருக்கும். நம்பிக்கையோடு காத்திருப்போம். வெற்றி நிச்சயம் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், “சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலேயே தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்ற இந்த தேர்தலில்தான் அதிக வாக்குப்பதிவு (85%) நிகழ்ந்துள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்று இந்த தேர்தலை ஒரு திருப்புமுனை தேர்தலாக மாற்றத்திற்கான முன்னோட்டமாக மாற்றிய அனைத்து வாக்காளர்களும் உள்ளம் கனிந்த நன்றி! நம் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதலே, இவர்களுக்கு கட்டமைப்பு கிடையாது, தேர்தல் பணி செய்ய அனுபவம் போதாது, பூத் லெவல் ஏஜென்டுகளே இல்லை என்கிற பொய் கருத்துருவாக்கத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கட்டமைக்க முயன்றன. ஆனால் அந்த கருத்துருவாக்கத்தை அடித்து நொறுக்கும் விதமாக தொடர்ந்து 48 மணிநேரம் உணவு உறக்கம் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல், அதுவும் குறிப்பாய் தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று காலை 5 மணி முதல் இரவு வாக்குப்பதிவு முடிந்து ஒப்புகை சான்றிதழ் 17C பெற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறைக்குப் போகும்வரை தங்கள் கடும் உழைப்பை வழங்கினார்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்கள். அவர்கள் உழைப்பிற்கு தமிழக மக்களே சாட்சி. கழக வெற்றிக்கு அயராமல் உழைத்த பூத் முகவர்கள், கழகத் தோழர்கள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.
பூத் முகவர்களாக பெரும்பாலும் இளைஞர்களும் அதிலும் முன்னுதாரணமாக 50 சதவீதம் பெண்களுமே பணியாற்றினார்கள். நம் இயக்கத்தின் உந்துசக்தியாக பெண்களே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஆதாரம். மாற்றத்திற்காக உழைத்த அத்தனை பெண்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! இந்த தேர்தலையொட்டி இதுவரை ஆண்ட கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என நினைத்து தேர்தலுக்கு முதல் நாள் வரையிலும் பணப்பட்டுவாடா செய்தன. ஆனால் பொது வாழ்வில் நேர்மையையும் ஊழலற்ற நிர்வாகத்தையும் முன்னிறுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வேட்பாளர்களும் மக்களின் அன்பை மட்டுமே நம்பி களத்தில் நின்றனர். அப்படி நேர்மையை மட்டுமே முதலீடாக கொண்ட எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க நாடு கடந்து வந்த இளைஞர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள், அனுபவம் வாய்ந்த வயதில் மூத்த வாக்காளர்கள், மாற்றத்தை விரும்பும் மக்கள் என பால், வயது பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்தார்கள். இதுதான் மக்களுக்கான ஜனநாயகம். மக்களே முன்னெடுக்கும் ஜனநாயகம். இதை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உணர்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள்! வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை ஆறு மணிக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றக் காத்திருந்தார்கள். அவர்களின் மனவோட்டத்தை புரிந்துகொண்டு 'சூரியன் அஸ்தமனத்திற்கு' பின்பும் இரவு 8 மணி வரை மக்களை வாக்களிக்கச் செய்த தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் மிக்க நன்றி. இறுதியாய், ஏப்ரல் 23 எப்படி இதுவரை வரலாறு காணாத வாக்குப்பதிவுக்கு சாட்சியாக இருந்ததோ அதேபோல் மே 4, இதுவரை வரலாறு கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்திற்கான வெற்றியின் சாட்சியாக இருக்கும். நம்பிக்கையோடு காத்திருப்போம். வெற்றி நிச்சயம். வாய்மையே வெல்லும் !” எனக் குறிப்பிட்டுள்ளார்.

