#BREAKING இனி ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்
‘ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் ரயில் முன்பதிவு செய்ய வரும் ஜனவரி 12க்கு பிறகு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என, ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 85 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஆதார அட்டை இணைப்பு முறையை ரயில்வே கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பது தற்போது அமலில் இருக்கிறது. இதையடுத்து, மற்ற நேரங்களிலும் ஆதார் இணைப்பை படிப்படியாக கட்டாயமாக்கப்பட உள்ளது. அதன்படி, டிசம்பர் 19ம் தேதி முதல் காலை 8:00 மதியம் 12:00 மணி வரையிலும், வரும் ஜனவரி 5ம் தேதிக்கு பிறகு, காலை 8:00 மணி முதல் மாலை நான்கு மணி வரையிலும் டிக்கெட் எடுக்க ஆதார் இணைப்பு கட்டாயம் ஆகிறது. இதுவே, ஜனவரி 12ம் தேதிக்கு பிறகு, ஆன்லைனில் ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால், ஆதார் எண் இணைப்பு இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவு மையங்களில் மாற்றம் இல்லை:
இது குறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: உண்மையான பயனாளர்களுக்கு, ரயில்வே டிக்கெட் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., ஐ.டி.,யுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்கண்ட நிபந்தனைகள் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுக்கு பொருந்தாது என ரயில்வே தெரிவித்துள்ளது. இருப்பினும், ஐ.ஆர்.சி.டி.சி., உண்மையான பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைக்கும்போது, ஏற்பட்டுள்ள குறைபாடுகளை ரயில்வே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


