மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஆற்றில் சிக்கி உயிரிழப்பு

 
மீனவர்கள்

குளித்தலை அருகே மாயனூர் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஆற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் மீன்பிடி தொழிலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவ குடும்பத்தை சேர்ந்த கர்ணன் மகன் கார்த்திக்(26)நேற்று மாலை காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இரவு நேரம் கழிந்தும் மீன் பிடிக்க சென்ற கார்த்திக் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து இன்று காலையில் கார்த்திக் குடும்பத்தினர் அக்கம் பக்கம் மற்றும் காவிரி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மீன்பிடிக்கும் இடத்தில் நீரில் மூழ்கி மீனவர்கள் தேடும்போது ஆற்று நீரின் அடியில் கார்த்திக் இறந்த நிலையில் இருந்துள்ளார். நீரில் மூழ்கி இருந்த உடலை மீனவர்கள் மீட்டு காவிரி கரைக்கு எடுத்து வந்தனர்.

இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன் பிடிக்க சென்ற மீனவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மீனவ குடும்பத்தின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.