இறந்தும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்

 
youth

கோவை சூலூர் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (28). இவர் கடந்த 14-ஆம் தேதி சூலூர் காங்கேயம்பாளையம் செக் போஸ்ட், அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சையில் இருந்த பாலமுருகனுக்கு மூளை சாவு ஏற்பட்டது. 

இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதையடுத்து மூளை சாவு அடைந்த பாலமுருகனின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக வழங்க மருத்துவமனை நிர்வாகம், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. 

அதன்படி இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க விமான மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞர் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.