கள்ளக்காதலன் திருமணம் செய்ய முடிவெடுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்காட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் விஜய்(30). இவருக்கும் அவரது அண்ணன் பிரபுவின் மனைவி மஞ்சு( 26)-என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விஜய், தனது அண்ணன் மனைவி மஞ்சுவுடன் ஏற்காடு சுற்றுலா வந்துள்ளார். ஏற்காட்டிற்கு வந்த அவர்கள் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து நேற்று இரவு தங்கி உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை விடுதி அறையின், கழிவறையில் மஞ்சூர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விஜய் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ஏற்காடு போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விஜய் நேற்று இரவு மது அருந்திவிட்டு, மஞ்சுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தனக்கு வரும் 23ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாகவும் திருமணத்திற்கு பின்னர், தங்களது நட்பை தொடர முடியாது எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒன்றாக தூங்கியுள்ளனர். திடீரென அதிகாலை விஜய் கண்விழித்து பார்த்த போது, மஞ்சுவை காணவில்லை. அதிர்ந்து போன விஜய், கழிவறை சென்று பார்த்தபோது, அங்கு மஞ்சு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஜெயராமனுக்கு பிரபு, விஜய் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அண்ணன் பிரபுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பணி நிமித்தமாக பிரபு, வெளிநாடு சென்றுள்ளார். அப்போது ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருந்ததால், மஞ்சுக்கும், கணவனின் தம்பி விஜய்க்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் விஜய்க்கு திருமணம் என்ற செய்தி கேட்டதும் மஞ்சு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.