பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த வட மாநில பெண்! ஆண் நண்பருக்கு அனுப்பி அட்டகாசம்
ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த வட மாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஓசூரில் டாட்டா தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் விடுதியில் ரகசிய கேமரா வைத்ததாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்ட நடத்திய நிலையில் ரகசிய கேமரா வைத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நீலு குமாரி குப்தா (23)என்ற இளம் பெண் தொழிலாளியை உத்தனபள்ளி போலீசார் கைது செய்தனர். அவர் தனது ஆண் நண்பருக்கு ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த நிலையில் அது சமூக வலைத்தளத்தில் பரவி வந்துள்ளது அதன் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் ஆண் நண்பர் சதீஷ் குமார் என்பவர் பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட போலிசார் ஆண் நண்பரை கைது செய்ய புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பெண் தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்,மேலும் முதல் சிப்ட் பணிக்கு யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதற்ற காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குளியல் அறையில் ரகசிய கேமராக்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தனி கவனம் செலுத்தி தீவிர விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


