கண் முன்னே வெட்டப்பட்ட மரங்களை கட்டி அணைத்தபடி கதறி அழுத பெண்- வீடியோ வைரல்

 
s

10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்த்த மரங்களை அதிகாரிகள் வெட்டிச் சாய்த்த நிலையில்,  கண் முன்னே வெட்டப்பட்ட மரங்களை கட்டி அணைத்தபடி கதறி அழுத பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியே மின் பாதை திட்டம் அமைக்கப்பட்டுவருகிறது. மின் பாதை, உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக செல்வியின் நிலத்தில் உள்ள மரங்களை அதிகாரிகள் வெட்டி சாய்த்தனர். 10 ஆண்டுகளுக்கும் மேல் பார்த்துப் பார்த்து வளர்த்த மரத்தை வெட்டுப்படுவதை தடுக்க கட்டிப்பிடித்து அழுத செல்வியை போலீசார் இழுத்துச் சென்றனர். தன்னிடம் ஒப்புதல் பெறாமல் மரங்களை வெட்டி சாய்த்துவிட்டதால் செல்வி மரங்களை கட்டியணைத்தப்படி, கதறி அழுதார். மா, தேக்கு, பப்பாளி மரங்களை 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்த நிலையில் தற்போது வெட்டி விட்டதாக  செல்வி கண்ணீர் மல்க தெரிவித்தார். மரம் வளர்ப்பதை அரசு ஊக்குவிக்கும் நிலையில், மறுபுறம் மின் திட்டத்திற்காக மரங்களை வெட்டுவது ஏன்? வேறு நிலத்தின் வழியாக மின் திட்டத்தை செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தும் கேட்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட செல்வி என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளி கட்டுவதற்காக 40 செண்ட் நிலத்தை அரசுக்கு தானமாக அளித்தவர் என்பது குறிப்பிடதக்கது.