காவிரியில் 8 மாத பெண் கைக்குழந்தையுடன் மிதந்து வந்த பெண் சடலம்... நாமக்கல்லில் சோகம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி கரையோரம் 8 மாத பெண் கைக்குழந்தையுடன் மிதந்து வந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை அக்ரஹாரம் பகுதியில் காவிரி கரையோரம் அடையாளம் தெரியாத பெண் சடலத்துடன் 8 மாத பெண் கைக்குழந்தை ஒன்றும் சடலமாக அருகருகே காவிரி ஆற்றில் சடலமாக மிதந்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் இறங்குவதற்கான இடம் இங்கு இல்லாததால் வேறொரு இடத்தில் சுமார் 25 வயது நிரம்பிய இளம்பெண் கைக்குழந்தையுடன் காவிரி ஆற்றில் குதித்திருக்கலாம் எனவும், சடலம் மிதந்தபடியே அக்ரகாரம் காவிரி கரையோரம் ஒதுங்கி இருக்கலாம் எனவும் பள்ளிபாளையம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்தப் பெண் உள்ளூர் பகுதியை சார்ந்தவர் இல்லை என உள்ளூர் பொதுமக்கள் கூறும் நிலையில் அந்தப் பெண் யார்? காவிரி ஆற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காவிரி ஆற்று நீரில் தவறுதலாக குழந்தையுடன் விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா? என பள்ளிபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கைக்குழந்தையுடன் பெண் சடலம் காவிரி ஆற்றில் இருந்து மீட்கபட்டுள்ளது.

