திண்டிவனத்தில் கார் மீது வேன் மோதி விபத்து- சிறுவன் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கார் மீது வேன் மோதியதில், வேன் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டிவனம் அருகே முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த மூன்று பேர் செஞ்சியிலிருந்து கோட்டகுப்பத்திற்கு டிரைவர் அமீன் என்பவர் ஒட்டி கொண்டு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் திண்டிவனம் புறவழிச்சாலை கர்ணாவூர் பேட்டை அருகே நெடுஞ்சாலையில் திரும்பும் பொழுது மதுரை மாவட்டம், அழகுரெட்டிப்பட்டியில் இருந்து மேல்மருவத்தூரில் உறவினரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் மதுரை சென்ற வேன், கோட்டகுப்பம் நோக்கிச் சென்ற மினி வேன் மீது மோதிய விபத்தில் மினி வேன் முழுவதுமாக சேதம் அடைந்தது.
விபத்தை ஏற்படுத்திய வேன் நெடுஞ்சாலையில் தலை குப்புற கவிழ்ந்து உருண்டோடியதில், அதில் பயணம் செய்த வேன் டிரைவர் சிவகுமார்,மற்றும்
தெய்வம், சிவகாமி, புவித்தா, கலைச்செல்வி, ராணி, அன்புராஜ், பெருமாயி, 15 வயது சிறுவன் கோகுல், 8 வயது சிறுமி சாதனா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கழுத்தில் வெட்டு காயமடைந்த தெய்வம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.