நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தவெக நிர்வாகி கொடூரமாக அடித்துக்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தேவூர் பேரூராட்சி த.வெ.க துணை செயலாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புளியம்பட்டி கோவிந்தன் காட்டுவலசு பகுதியைச் சார்ந்தவர் அருண்குமார். தேவூர் பேரூராட்சி தமிழக வெற்றி கழகத்தின் துணைச் செயலாளரான இவர், எலக்ட்ரீசியன் பணி செய்து வருகிறார். நேற்று மாலை பலத்த காயங்களுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக இருவர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது உறவினர்கள் கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி எலக்ட்ரீசியன் அருண்குமார் பரிதாபமாக இன்று உயிர் இழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது நேற்று மாலை நண்பர்கள் 4 பேர் இடையே சங்ககிரி அருகே உள்ள வினோபாஜி நகர் வாய்க்கால் கரையோரம் அடிதடி தகராறு ஏற்பட்டதாகவும், இதில் காயமடைந்தவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலை மறைவான முன்னாள் கொலை குற்றவாளி அன்பரசன் மற்றும் மூவரை தேவூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நண்பர்களே அடித்துவிட்டு அவர் தவறி கீழே விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தமிழக வெற்றி கழக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

