ஆவடி அருகே தண்ணீர் அண்டாவில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி
![குழந்தை பலி](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/f3098f0ca8055565e2cc38d81599f4b4.webp)
சென்னை அடுத்த ஆவடி அருகே தண்ணீர் அண்டாவில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த மோரை ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் முரளி. ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி கங்கம்மாள். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஜீவானந்தம் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் வழக்கம் போல் ஆட்டோ ஓட்ட சென்றிருந்தார். தாய் கங்கம்மாள் உடல் நிலை சரி இல்லாததால் மாத்திரை உட்கொண்டு வீட்டில் உறங்கியுள்ளார். அப்பொழுது விளையாடி கொண்டிருந்த குழந்தை ஜீவானந்தம் வீட்டின் அருகில் குளியலறையில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த அண்டாவில் தலைக் குப்புற கவிழ்ந்து மூழ்கியுள்ளார்.
திடீரென தூக்கம் தெளிந்த தாய் கங்கம்மாள் அருகில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே சுற்றுப்புறத்தில் தேடி பார்த்துள்ளார். அப்பொழுது குழந்தை குளியலறையில் நீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து அலறியுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை அழைத்து தூக்கி கொண்டு அருகில் இருந்த மோரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திலிருந்து காவல்துறை விசாரணையின் பின்பு குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை வளாகத்திற்கு 100-கும் மேற்பட்ட உறவினர்கள் விரைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.