அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த ஒருவர் பரிதாப மரணம்!
ஜல்லிக்கட்டு போட்டியில் நண்பரின் காளை முட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. போட்டியை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைக்க, காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாயும் காளைகளை அடக்க அனைத்து சுற்றுகளையும் சேர்த்து மொத்தமாக, 700 வீரர்கள் களமிறங்கினர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த நவமணி என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். நண்பரின் காளையை போட்டிக்காக அவர் அழைத்து வந்த போது, காளை அவரை முட்டியிருக்கிறது. நவமணியுடன் சென்ற அவரது சகோதரர் கோபியும் படுகாயமடைந்துள்ளார். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நவமணி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.