காட்டு யானைத் தாக்கி தொழிலாளி மரணம்; பசுவைத்தேடி சென்றதால் நேர்ந்த சோகம்!
சமீப காலமாக காட்டு விலங்குகள் உணவுத்தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகமாகி வருகிறது. இதனை தடுக்க பல பகுதிகளில் சட்டவிரோதமாக மின்வேலி வைக்கப்படுவதால், விலங்குகள் அதில் சிக்கி உயிரிழக்கின்றன. விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சத்திய மங்கலத்தில் இருக்கும் புலிகள் சரணாலயத்தில் இருந்து காட்டு யானைகள் வெளியே வந்து, அடிக்கடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல், காட்டுப்பகுதிக்குள் செல்பவர்களை தாக்கி மரணமடைய செய்கின்றன.
இந்த நிலையில் பசுவை தேடி காட்டுப்பகுதிக்குள் சென்ற தொழிலாளியை காட்டு யானை தாக்கிக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆரனூர் மலைப்பகுதிக்கு, தனது பசுவைத்தேடி சென்ற சிக்கண்ணா என்பவர் தான் காட்டு யானையால் கொல்லப்பட்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவரது சடலத்தை மீட்டு வந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடருவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.