பல ஆண்டு கனவு நனவானது : ராஜபாளையம் - கொருக்காம்பட்டி புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!

 
1

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத கிராம பகுதிகளுக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி. 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் தவித்துவந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து கொருக்காம்பட்டி வரை இயக்கப்படும் புதிய அரசு பேருந்து சேவையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் இன்று முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது போக்குவரத்து தேவைக்காக பேருந்து வசதி செய்து தருமாறு நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களின் சிறப்பு முயற்சியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர், அதன்பின்னர் அந்தப் பேருந்திலேயே பள்ளிச் சிறுவர்களுடன் பயணம் செய்தார். பயணத்தின் போது, பள்ளி மாணவி ஒருவரை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அன்போடு பயணித்தது அங்கிருந்த பொதுமக்களையும் அதிகாரிகளையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா ஐ.ஏ.எஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.