6 இளைஞர்களின் வாழ்வில் விளையாண்ட கல்யாண ராணி அதிரடி கைது

இளைஞர்களை குறி வைத்து தன்னை அனாதை என கூறி ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகையை பறித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியில் வந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சமூக வலைதளங்களின் மூலம் பழகி திருமணம் செய்துவிட்டு ஒரு மாதம் குடும்பம் நடத்தி பின்பு பணம், நகையை திருடி தப்பியோடிய மனைவியை மீட்டு தர கோரி வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் போலீசார் கடந்த ஐந்து மாதமாக இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சேலம் ஆத்தூர் பகுதியில் ஆறாவது திருமணம் செய்து டிரைவர் சின்ராஜ் உடன் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமியை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தகிரி தாலுக்கா மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மனைவி மகாலட்சுமி. இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் கணவன் பாலகிருஷ்ணன்வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு பிரிந்த நிலையில், மகாலட்சுமி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பாலாஜி என்பவர் உடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
பாலாஜி ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், இரு குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளை ஒன்றிணைத்து ஊட்டியில் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமி நாளடைவில் பாலாஜியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மூன்றாவது கணவராக ஊட்டியை சேர்ந்த பெயிண்டர் மணி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருடன் மூன்று மாதமே திருமணம் ஆகி குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட மன முறிவின் காரணமாக நான்காவதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருடன் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவரிடம் தன்னை அனாதை எனக் கூறி முறைபடி, உறவினர்களின் முன்னிலையில் கோயிலில் திருமணம் செய்துகொண்டார். பின்பு அவருடன் ஆறு மாதம் குடும்ப நடத்திவந்த மகாலட்சுமி, பணம், நகையை கொள்ளையடித்து தலைமறைவானார். இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த வருடம் நவம்பர் மாதம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப் பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் முகநூலில் பழகிய மகாலட்சுமி, நான் அனாதை எனவும், எனக்கென யாரும் இல்லை எனவும் தனக்கு வாழ்க்கை அளிக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து மணிகண்டன், அவலூர்பேட்டையில் உள்ள கோயிலில் குடும்பத்தினர் முன்னிலையில் அப்பெண்ணை திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார். ஒரு மாதம் மட்டுமே குடும்பம் நடத்திய மகாலட்சுமி, மணிகண்டன் வீட்டிலிருந்து ஒரு லட்சம் பணம் 70,000 பணத்தை எடுத்துக்கொண்டு மர்ம காரில் தப்பி சென்றுள்ளார்.
வீட்டில் காணாமல் போன மனைவி குறித்து மணிகண்டன் வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் மனைவியை கண்டு பிடித்து தருமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மனைவியை கடந்த மூன்று மாதமாக தேடி வந்த நிலையில், மகாலட்சுமி சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் ஹோட்டல் மாஸ்டர் சின்ராஜ் என்பவருடன் ஆறாவதாக திருமணம் செய்து அவருடன் குடும்ப நடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மகால்ட்சுமியையும், அவரது 6வது கணவர் 27 வயதான சின்ராஜ் ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்துவருகின்றனர். தொடர்ந்து இதுவரை 6 பேருடன் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமியை வளத்தி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.