சண்டையில் மயங்கிய பெண்ணை சரமாரியாக தாக்கிய கும்பல்- அதிரவைக்கும் வீடியோ

 
அ

நிலப்பிரச்சனையில் பெண் ஒருவரை தாக்கி அவர் மயக்கம் அடைந்த பின்னரும் அவரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி அடுத்த திருவண்ணாமலை சாலையில் உள்ள வேட்டியம்பட்டி ஏரிக்கரை என்ற பகுதியில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவருக்கும் இவரது உறவினரான சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. வேட்டியம்பட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள நிலத்திற்கு அவ்வப்பொழுது வரும் மல்லிகாவுடன் சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து தகராறில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளனர். இது சம்பந்தமாக டவுன் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வேட்டியம்பட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள மல்லிகாவிற்கு சொந்தமான மல்லிப்பூ தோட்டத்திற்கு மல்லிகா வந்த பொழுது அங்கு வந்த சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மல்லிகாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். 


வாக்குவாதம் முற்றியதில் மல்லிகாவை சந்திரசேகரன் தாக்குவதும் அதேபோல் அவர்கள் குடும்பத்தினர் மல்லிகாவை பிடித்து கீழே தள்ளுவதுமாக உள்ளனர். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த மல்லிகாவை சந்திரசேகரனின் உறவின பெண்கள் சிலர் மயங்கி கிடக்கும் மல்லிகாவை காலால் எட்டி உதைத்து நடிக்கிறாயா என கேட்பதுடன், கைகளாலும் தாக்குகின்றனர். இந்த வீடியோவை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் எடுத்துள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மயங்கி கிடந்த மல்லிகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள் இது சம்பந்தமாக சம்பவ இடத்தில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.