கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி

 
கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி, எப்ரி, மகராஜாகடை, பெரிய சக்கனாவூர், ஏக்கல்நத்தம் ஆகிய வனப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 10 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த 2 காட்டு யானை மகராஜாகடை வனப்பகுதியில் சுற்றித்திரிந்து அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. 

இந்நிலையில் இன்று அதிகாலை மகராஜகடை அருகேயுள்ள பூக்கவுண்டனூரை சேர்ந்த சாம்பசிவம்(55) என்பவர் தனது தோட்டத்தில் கொள்ளு அறுவடை செய்ய சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றைக் காட்டு யானை திடீரென்று அவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது யானை தாக்கி அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து யானைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையினருக்கு பலமுறை தெரிவித்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்காததால் சாம்பசிவத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலை  கொண்டு வந்து மகராஜகடை - கிருஷ்ணகிரி சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காட்டு யானைகளை விரட்ட வேண்டும் மற்றும் இறந்தவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கு மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவலிங்கம் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவயிடத்தில் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் காட்டு யானைகளை வேறு வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும், இறந்தவரின் குடும்பத்திற்க்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கோரி 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போரட்டத்தில் ஈடுப்பட்டனர். 

பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து இறந்தவரின் உடலை எடுக்க உறவினர்கள் அனுமதித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் உடல் பிரேத பிரசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்துள்ளனர். மேலும் இந்த ஒற்றைக் காட்டு யானை கடந்த மாதம் மகாராஜாகடை அருகே உள்ள பெரிசக்கனாவூர் கிராமத்தில் விவசாய தாக்கி படுகாயம் அடைந்து குறிப்பிடத்தக்கது.