வரும் நவம்பர் 18ம் தேதி கரையை கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வரும் நவம்பர் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று ) காலை 0830 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை நிலவக்கூடும். இது 18-ஆம் தேதி காலை வடக்கு ஒரிசா - மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியிருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவாகி நவ.18ல் வங்கதேசத்தின் மோங்லா - கேபுபரா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.