பாடத்திட்டத்தில் மாற்றமா? - டி.என்.பி.எஸ்.சி அதிரடி விளக்கம்..!
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது.
வரும் 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருந்தது. அதில் தேர்வு விவரங்களையும் தெரிவித்திருந்தது. இதனிடையே, டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகளுக்கான பாடத்திடத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், “2026-ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் - தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வுகள், டிசம்பர் 2024-ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்” என டி.என்.பி.எஸ்.சி. கேட்டுக்கொண்டுள்ளது.


