உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா!

 
stalin

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலினின்படி, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் இன்று (08.03.2024) ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
தொழில்துறையில், இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன், 1971 ஆம் ஆண்டிலேயே. அயராது உழைத்து தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொழிற்பூங்காவின் உருவாக்கத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். இன்று சிப்காட் நிறுவனம் 18 மாவட்டங்களில், சுமார் 39,225 ஏக்கர் பரப்பளவில், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 30 தொழில்பூங்காக்களை உருவாக்கி மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு குறிப்படத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.


இந்தியாவில் 40 சதவீகிதத்திற்கும் அதிகமான பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் இந்த உலக மகளிர் தினத்தில் சிப்காட் தொழிற்பூங்காக்களில் பெண்கள் மூலம் பசுமை முயற்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு உலக மகளிர் தினத்தில் கருப்பொருளான "பெண்களில் முதலீடு செய்யுங்கள் பெண்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்" என்பதை உண்மையாக்க உலக மகளிர் தினத்தையொட்டி இன்று 23 சிப்காட் தொழில் பூங்காக்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனம் நீடித்து நிலைபெறத்தக்க வகையிலான வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பூங்காக்கள் விளங்கிட. ஏற்கனவே நடப்பட்டுள்ள 6.00 இலட்சம் மரக்கன்றுகளை வனத்துறையில் இருந்து நன்கு வளர்ந்த நாட்டு மரக் கன்றுகளை கொள்முதல் செய்வதன் மூலம் சிப்காட் அதன் திறந்த வெளிப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அருகிலுள்ள பஞ்சாயத்துகளில் இப்போது நடப்படவுள்ள 1.00 இலட்சம் மரக்கன்றுகளை சேர்த்து மொத்தமாக 7.00 இலட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து சிப்காட் நிறுவனம் பராமரிப்பு செய்யும். 

மேலும் இந்த ஆண்டிற்குள் 10 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே சிப்காட் நிறுவனத்தின் நோக்கமாகும். இதனை தொடர்ந்து உலக மகளிர் தினத்தையொட்டி, இன்று சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள நாவலூர் ஏரி பகுதியில், சிப்காட் மேலாண்மை இயக்குநர் மரு. கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இயக்குநர் திரு. ஆ.ர. ராகுல்நாத் இ.ஆ.ப., ஆகியோர் 1000 மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதே போன்று அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் அம்மாவட்ட பெண் ஆட்சியர் அவர்களோ அல்லது அம்மாவட்ட அளவிலான பெண் உயர் அலுவலர்களின் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம், தமிழ்நாட்டில் பசுமைப் பொலிவினை ஏற்படுத்தவும். காற்று மாசுபாட்டினை குறைக்கவும் வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.