பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

 
பாதிரியார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் பெனடிக்ட்  ஆன்றோ  மீது நர்சிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ்  நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Image

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக்கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. மேலும், தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட் களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதே சமயம் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது. 

புகார்

இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில், பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்த சமயத்தில் தான் பிரார்த்தனைக்காக சென்றதாகவும், அப்போது பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும், மோசமாக தொட்டதாகவும், பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும், அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் அந்த மாணவி  புகாரில் கூறி உள்ளார்.

வீடியோக்கள்

அந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீஸார் தேடி வருகின்றனர்.