"சட்டமன்றமும், பாராளுமன்றமும் பல்லாங்குழி விளையாடவா?" என பேசியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு
சென்னை, திருமங்கலம் போலீசார் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்தாண்டு நவம்பர் 17ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது, சட்டங்கள் திட்டங்களை நிறைவேற்றும் சட்டமன்றம், பாராளுமன்றங்கள் இருக்கும் போது எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் சொல்லிவிட்டது- நீதிமன்ற உத்தரவு என சொன்னால் எப்படி? சட்டமன்றமும் பாராளுமன்றமும் பல்லாங்குழி விளையாட வா இருக்கிறது என சீமான் பேசியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பின் திருமங்கலம் போலீசார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். BNS 196(1)- இரு குழுக்கள் அல்லது பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் பேச்சு, 353- பொது தீமைக்கு வழி வகுக்கும் அறிக்கை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


