வைகோவின் கனவில் விழுந்த பலத்த அடி! "நான் வரமாட்டேன்" என முரண்டு பிடிக்கும் எம்எல்ஏ!
திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற மதிமுகாவால் அமைச்சரவையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் தனி சின்னத்தில் போட்டியிடாமல் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டது. இதனால் மதிமுக சார்பாக 2 இடங்களில் வெற்றி பெற்றாலும் அந்த இரண்டு எம்எல்ஏக்களும் திமுக எம்எல்ஏவாகவே கருதப்படுவார்கள். இதனால் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முடியாத நிலையானது ஏற்பட்டது.இந்த நிலையில் அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைய வைகோ திட்டமிட்டுள்ளார். மேலும் மதிமுக 2 எம்எல்ஏக்களை தங்கள் தொகுதிகளில் ராஜினாமா செய்ய வைத்து தவெக ஆதரவில் தேர்தலை எதிர்கொள்ள மதிமுக திட்டமிட்டது. இதற்காக மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ பங்கேற்ற நிலையில் சீர்காழி எம்எல்ஏ பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் கூறுகையில், நான் திமுக உறுப்பினராக உள்ளேன். இதனால் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவேண்டிய தேவை இல்லையென கூறியுள்ளார்.
எனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா.? என்ற சந்தேகத்தின் சீர்காழி எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கனவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

