வெல்லம் ஊட்ட முயன்ற ஆட்டோ ஓட்டுநரை மிதித்து கொன்ற யானை

 
x

மத்திய பிரதேசத்தில் வெல்லம் ஊட்ட முயன்ற ஆட்டோ ஓட்டுநரை யானை கொடூரமாக தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உஜ்ஜைனைச் சேர்ந்த முனிவர்கள் குழு ஒன்று, ராஜ்நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்பதற்காக யானையை இந்தூருக்கு அழைத்து வந்தனர். நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த யானை அருகிலுள்ள கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ராஜ்நகர், இ-செக்டரைச் சேர்ந்த விஜய் ஹோல்கர் (49) என்ற ஆட்டோ ஓட்டுநர் யானைக்கு வெல்லத்தை ஊட்ட முயன்றார். அது சாப்பிட மறுத்தது. உடனே வெல்லத்தை யானை மீது அமர்ந்திருந்த பாகனிடம் கொடுத்தார். உடனே கோபமடைந்த அந்த யானை தனது தும்பிக்கையால் அவரைத் தள்ளியதில், அவர் கீழே விழுந்தார். பின்னர் அவரது இடுப்பின் மீது யானை தனது காலை வைத்து மிதித்தது. இந்தத் தாக்குதலில் அவருக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டன. 


விஜய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக யானை பாகன் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள்  நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதி வழியாக யானையைக் கொண்டு செல்வதற்குத் தேவையான அனுமதி பெறப்பட்டிருந்ததா என்பதை அவர்கள் சரிபார்த்து வருகின்றனர். பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.