மச்சினிச்சி மீது வசிய மருந்து ஊற்றிய இளைஞர் சிறையிலடைப்பு
மச்சினிச்சி மீது வசிய மருந்து ஊற்றிய இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 23 வயதான இந்த இளைஞரின் மனைவி தேன்மொழி(22). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி திடீரென்று கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தேன்மொழி, தான் செவியலியர் என்பதால் வெளிநாட்டில் அதுசம்பந்தமாக வேலை கிடைக்க அங்கே போய்விட்டார்.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜேஷ், மச்சினிச்சி தமிழ்மொழியை தன் வலையில் சிக்க வைக்க அவரிடம் பலமுறை பேசி பார்த்திருக்கிறார். ஆனால் தமிழ்மொழி அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காததால், நண்பர்கள் சிலர் சொன்ன யோசனையின்படி, வசிய மருந்து கொடுத்து தன் வலையில் விழ வைக்க முடிவு எடுத்திருக்கிறார்.
அதன்படி கடந்த புதன்கிழமை அன்றூ பூங்குளத்தில் உள்ள தமிழ்மொழி வீட்டிற்கு சென்று வசிய மருந்து கொடுக்க சென்றிருக்கிறார். அதையெல்லாம் அவர் வாங்கி குடிக்கும் நிலையில் இல்லாததால், அவர் மேல் ஊற்றிவிட்டு ஓடியிருக்கிறார்.
ஏதோ ஆசிட்டை ஊற்றிவிட்டார் என்று தமிழ்மொழி கூச்சல் போட்டிருக்கிறார். மருத்துவமனையில் நடந்த சோதனையில்தான் அது ஏதோ திரவியம் என்று தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து ஆலங்காயம் போலீசில் புகார் அளித்திருந்ததால், ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போதுதான், மனைவி இல்லாததால் மச்சினிச்சியை மடக்க அவர் மேல் வசிய மருந்தை ஊற்றினேன் என்று சொல்லி இருக்கிறார். இதன் பின்னர் அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.