காதலிக்காக விலை உயர்ந்த நாயை திருடிய இளைஞர் கைது
சென்னையில் காதலிக்காக விலை உயர்ந்த நாயை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது யமஹா ஆர்.எக்ஸ் 100 இருசக்கர வாகனம் கடந்த மாதம் 2 -ம் தேதி வீட்டில் வெளியில் இருந்து திருடு போனது. இது தொடர்பாக ரமேஷ்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அது தொடர்பான சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சாலிகிராமம் தேவரி நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் விலை உயர்ந்த பல்சர் இருசக்கர வாகனம் திருடு போனது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியிலும் அதே நபர் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விருகம்பாக்கம் சாலிகிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் அதே நபர் இருசக்கர வாகனங்களில் இருந்த பேட்டரிகளை திருடி எடுத்துச் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நபரின் அடையாளங்களை வைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்த தில்லைக்கரசி என்பவர் வீட்டில் அவரது செல்ல பிராணி நாய் ஒன்று காணமல் போனது. சிசிடிவியில் ஒரு நபர் அந்த நாயை தூக்கிச் செல்வது தெரிந்து, Beagle எனும் ரகத்தைச் சார்ந்த வெளிநாட்டு நாயின் விலை 30 ஆயிரம் எனவும், கண்டுபிடித்து தருமாறு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விருகம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில், அதே நபர்தான் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் திருடன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சிசிடிவி காட்சிகளில் உள்ள திருடனின் அடையாளங்களை வைத்தும் சிசிடிவி பதிவுகளை பின் தொடர்ந்து சென்றதில் சாலிகிராமம் தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சுஜித் என்ற நபர்தான் திருடன் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். அந்த வீட்டிலிருந்து மறைத்து வைத்திருந்த விலை உயர்ந்த வெளிநாட்டு ரக நாயையும் பறிமுதல் செய்த போலீசார் திருடி விற்பதற்காக மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனங்களையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட திருடன் சுஜித், வாகனங்கள் மற்றும் வாகன பேட்டரிகளை திருடி விற்று கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது காதலிக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் அதனால் விலை உயர்ந்த இந்த வெளிநாட்டு நாயை திருடி வந்து வீட்டுக்குள் வைத்து பழகி சில நாட்களில் தனது காதலிக்கு பரிசாக கொடுக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தான் சிக்கிக் கொண்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுஜித்தை சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.