பிரியாணி சாப்பிட்டு வீட்டிற்கு திரும்பிய பெண் மாரடைப்பால் மரணம்; மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

 
suicide

சென்னை அயனாவரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தம்புசாமி(53). பிளம்பிங் வேலை பார்த்து வரும் இவருக்கு, 23 வருடங்களுக்கு முன்பு பவானி(47) என்பவருடன் திருமணமாகி உள்ளது.  இவர்களுக்கு 22வயதில் யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

suicide

இந்த நிலையில் நேற்று பவானி மேட்டு தெருவில் உள்ள பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் சென்றுள்ளார். அங்கு பிரியாணி சாப்பிட்ட பவானி, பின்னர் வீட்டிற்கு உறவினருடன் நடந்து வந்த போது திடீரென பவானிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பவானியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரது உறவினர் அழைத்து சென்ற போது, வரும் வழியிலேயே பவானி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.. 

இது குறித்து தகவலறிந்து பவானியின் கணவர் தம்புசாமி, அவரது மகள் யுவஸ்ரீ ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து இறந்த பவானியின் உடலை பார்த்துள்ளனர். பின்னர் பல மணி நேரமாக தம்புசாமி காணாமல் போனதால், அவரது மகள் யுவஸ்ரீ செல்போனில் தொடர்பு கொண்ட போதும் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து பவானியின் உடலை அவரது உறவினர் உதவியுடன் ஆட்டோ மூலமாக வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அப்போது வீட்டின் சமையல் அறையில் தம்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  தகவலறிந்த அயனாவரம் போலீசார் தம்புசாமியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது