அவரையும் கட்சியை விட்டு நீக்குவீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே? பாஜக கேள்வி
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அண்மையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பேசியபோது ஆளுநர் ரவியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசினார். ஆளுநரை செருப்பால் அடிக்கும் உரிமை தனக்கு இருக்கிறது என்றும், ஆளுநரை காஷ்மீர் மாநிலத்திற்கு அனுப்பி தீவிரவாதிகளை விட்டு கொன்று விடுவோம் என்று மிரட்டி இருந்தார்.
இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் துணை செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி ஒழுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது திமுக தலைமை. சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவ பெயர் ஏற்படுகின்ற வகையிலும் செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறது என்று திமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை போலவே, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டிருக்கிறார். அவரையும் கட்சியை விட்டு நீக்குவீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று கேட்டிருக்கிறார்.
கொஞ்சம் கண் காட்டியிருந்தா அங்கிருந்து போயிருக்க முடியுமா? கையில் கிடைச்சதை எடுத்து அடிச்சிருப்பான் மிகக்கடுமையாக ஆளுநரை விமர்சித்து பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.