முருகனுக்கு வேல் தூக்கியவர் விநாயகருக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?
தேர்தல் பயத்தில் வேல் ஏந்திய ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்.
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள ஓட்டலில் தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் மத்திய இணை அமைச்சர் முருகன். அதன்பின்னர் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திருப்பூர் நலனை கருத்தில் கொண்டு 100 படுக்கை வசதிகள் கொண்ட இ எஸ் ஐ மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நடந்து வரும் நிலையில் இது தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் என்பவர் அனைவருக்கும் சொந்தமானவர். திமுக தலைவராக அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். ஆனால் மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறுகிறார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது பற்றி முதல்வரிடம் மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்றார்.
தொடர்ந்த அது குறித்து பேசி முருகன், தேர்தலுக்கு முன்பு வெற்றிவேல் யாத்திரை என எனது தலைமையில் நடந்தது. உடனே தேர்தல் பயத்தில் வேலை ஏந்தி வெளியில் வந்தார் ஸ்டாலின். ஓட்டுக்காக அன்றைக்கு அப்படி செய்துவிட்டு இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது என்றார்.
தொழில் துறையில் சந்திப்பு கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர் சங்க தலைவர், தங்களை சந்தித்து குறைகளை கேட்டதற்கு அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். அவர் மேலும் பேசியபோது, தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வந்தபோது 18 மணி நேரம் இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆனால் தொழில் துறையினரை சந்தித்து அவர் கலந்துரையாடவில்லை. நாங்கள் அவரை சந்திக்க இருந்தோம்; பெரிய ஏமாற்றமாகிவிட்டது என்றார்.