என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்???.. விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார்.
மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.