மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா?? உங்கள் சொந்த பணத்தில் நினைவுச் சின்னம் கட்டுங்கள் - விஜயகாந்த் கண்டனம்..

 
“Vijayakanth

மக்கள் வரிப்பணத்தில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைப்பது அவசியமற்றது என்றும், மாறாக அந்தப்பணத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று  தேமுதி தலைவர் விஜயகாந்த்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ₹80 கோடியில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது.  விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, அயல்நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது, வேலை வாய்ப்பின்மை, கொரோனா பரவல் காரணமாக வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாக்க சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் பல டன்  நெல்மணிகள்  மழையில்  நனைந்து  முளைத்து  வீணாகி  வருகிறது.  மேலும் தமிழகம் முழுவதும் சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை  உள்ளது.

 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம்

இவ்வாறு  திமுக  அரசின்  நிர்வாக  சீர்கேட்டால்  தமிழக  மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், 80  கோடி  ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம். நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, சாலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றால் மக்கள் அதனை வரவேற்பார்கள். மேலும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர்  சிலை,  சென்னையில் வள்ளுவர் கோட்டம்  போன்ற பல நினைவு சின்னங்கள் உள்ள நிலையில் தற்போது 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது அவசியமற்றது.  

விஜயகாந்த்

மக்களின் வரி பணத்தை வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே மெரினா கடற்கரையில்  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் நினைவு சின்னம் அமைப்பது  ஏற்புடையது  அல்ல.  நினைவுச்  சின்னம்  அவசியம்  என்றால்  திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும்.  1996 ஆம்  ஆண்டு  திரை  உலகில்  50 ஆண்டுகளைக்  கடந்த கருணாநிதிக்கு பொன் விழாவின் போது அவரது புரட்சி வசனங்களுக்கு பரிசாக மிக பிரம்மாண்டமான தங்கப்  பேனாவை திரையுலகத்தின் சார்பாக ஏற்கனவே வழங்கியுள்ளதை நினைவு கூறுகிறேன். எனவே மீண்டும் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..