விஜய் முதல்வராவார்.. பிரதமர் ஆவார்.. - செய்தியாளர்களிடம் சிக்கி திணறிய சரத்குமார்
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று வைரமுத்து சும்மா பாடல் எழுதவில்லை . தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே ரஜினி என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ரஜினிக்கு எப்படி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழி இருக்கிறதோ அதைப்போலவே ஒவ்வொரு நடிகருக்கும் அதாவது பிரபல நடிகர்கள் பலருக்கும் அடைமொழி இருக்கிறது.
இளைய திலகம் பிரபு, நவரச நாயகன் கார்த்திக், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், புரட்சித்தமிழன் சத்யராஜ், இளைய தளபதி விஜய் , அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார், டாப் ஸ்டார் பிரசாந்த், புரட்சி கலைஞர் விஜயகாந்த் என்று பலருக்கும் இப்படி அடைமொழி இருக்கிறது. இதில் ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டார் என்று எல்லோரும் அழைத்து வரும் நிலையில் திடீரென்று அண்மையில் நடந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் , அந்த படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்திருக்கும் நடிகர் சரத்குமார், விஜய் சூப்பர் ஸ்டார் என்று கூறி சொன்னது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒவ்வொருத்தருக்கும் அவரவர் சூப்பர் ஸ்டார்தான் என்று மீண்டும் பேசி சலசலப்பை அதிகப்படுத்தினார். இந்த நிலையில் வாரிசு வடக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடந்தது. இதற்கு படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சரத்குமாரிடம் செய்தியாளர்கள், சூப்பர் ஸ்டார் விவகாரம் குறித்த கேள்வி எழுப்பினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போதே விஜய்க்கு சூப்பர் சார் பட்டம் கொடுக்கிறீர்களே என்று செய்தியாளர்கள் கேட்க, கோபமடைந்த சரத்குமார், என் மகனுக்கு நான் தான் சூப்பர்ஸ்டார். எனக்கு என் அப்பா தான் சூப்பர் ஸ்டார். அவர் அவருக்கு அவரவர் சூப்பர் சார் தான். அப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் விஷயத்தை பெரிதுபடுத்தி உலகத்தில் பெரிய பிரச்சனை போல் செய்ய வேண்டாம் என்றார் ஆத்திரத்துடன்.
விஜய் சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன். முதலமைச்சராக ஆவார், பிரதமர் ஆவார் என்று நான் சொல்லவில்லையே. சூப்பர் ஸ்டார் என்று தானே சொன்னேன் என்றார். உடனே செய்தியாளர்கள், விஜய்க்கு இளைய தளபதி என்று பட்டம் இருக்கிறது. அதை விடுத்து சூப்பர் சார் என்று ஏன் அழைத்தீர்கள் என்று கேட்க ,ஒவ்வொருத்தருக்கு ரேங்க் இருக்குது அதை வைத்து பேசினேன் என்று சரத்குமார் தடுமாற, அப்படி என்றால் ரஜினிக்கு ரசிகர்களிளிடையே மவுசு குறைந்துவிட்டது என்று சொல்கிறீர்களா? என்று போட்டு வாங்க , சமாளிக்க முடியாமல் திணறினார் சரத்குமார்.
நான் சுப்ரீம் ஸ்டார். சுப்ரீம் ஸ்டார் பெருசா சூப்பர் ஸ்டார் பெருசா என்று பட்டத்தை தான் பார்ப்பீர்களா? மனிதர்களை பார்க்க மாட்டீர்களா? என்று கோபமாக கேட்டார். செய்தியாளர்கள் அப்போதும் விட்ட பாடு இல்லை. சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் இருக்கும் போது இன்னொருவரை எதற்கு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறீர்கள்? என்று விடாமல் கேட்க, பதில் அளிக்க முடியாமல் திணறிய சரத்குமார் காரில் ஏறி பாய்ந்தார்.
இதற்கு முன்னதாக பிரபல நடிகர் மோகனிடம் இந்த சூப்பர் ஸ்டார் விவகாரம் குறித்து கேள்வி கேட்டபோது , விஜய் சூப்பர் ஸ்டார் தான். அஜித் சூப்பர் ஸ்டார் தான் ஆனால் சூப்பர் ஸ்டார் என்று தனியாக ஒருவருக்கு பட்டம் கொடுத்து வைத்திருக்கிறோம். அது யார் என்று எல்லோருக்கும் தெரியும் . அவர் திரைப்படத்தை விட்டு ஒதுங்கவில்லை. இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.