மத்திய அரசு எம்.பிக்களின் அதிகாரங்களை குறைத்து வருகிறது - விஜய் வசந்த் குற்றச்சாட்டு..

 
விஜய்வசந்த்

எம்.பி.க்களின் அதிகாரங்களை மத்திய அரசு குறைத்து வருவதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.  

கன்னியாகுமரி மாவட்டத்தின்,  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளான ATM, கழிவறை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு நாங்கள் நடத்தும் ஆர்பாட்டங்களை கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்போம்.

Vijay Vasanth -  விஜய்வசந்த்

குமரி மாவட்டத்தில் விமான நிலையில் அமைப்பது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர், தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசிப்பதாக கூறியுள்ளார். விரைவில் விமான நிலையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தேர்தலின்போது குமரி மாவட்டத்தில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாக மத்திய அமைச்சர்கள் கூறினர். ஆனால் இன்று வரை எந்த முயற்சியும் அவர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.  கன்னியாகுமரிக்கான எல்ல கோரிக்கைகளும் தாமதமாக நிறைவேற்றப்படுகின்றன.

குமரி மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் மத்திய அரசின் கவனம் மிக குறைவாக உள்ளது. மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை குறைத்து வருகிறது. மத்திய அரசு வழங்க வேண்டிய 2022 – 2023ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசை கண்டுகொள்ளாத மாவட்டம் புறக்கணிக்கப்படும் என்ற நிலையே தற்போது உள்ளது” என்று கூறினார்..