உச்சநீதிமன்றம் போன விஜய்சேதுபதி
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீடு முன் தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அன்று விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் தனது உதவியாளர்கள் விமான நிலைய பாதுகாவலர்களுடன் நடந்து சென்ற போது பின்னால் வந்த ஒரு நபர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி தாக்கியதாக கூறப்பட்ட அந்த நபர் மகாகாந்தி. அவரும் திரைப்படத் துறையைச் சேர்ந்த நபர் தான்.
விமானத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து பேசிய போது தன்னையும் தனது சாதியையும் இழிவாக விஜய்சேதுபதி பேசியதாக மகா காந்தி குற்றம் சாட்டியிருந்தார். அந்த ஆத்திரத்தில் தான் விஜய் சேதுபதி மீது தாக்க முற்பட்டதாக அவர் சொல்லி இருந்தார். இந்த விவகாரத்திற்கு பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மீது மகாகாந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், நடிகர் விஜய் சேதுபதி அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது . ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
கடந்த ஜூலை 29ஆம் தேதி இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது தவறானது. மேலும், சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று விஜய் சேது தரப்பில் வாதிடப்பட்டது. விளம்பர நோக்கத்துடன் மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான இந்த வழக்கை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் சேதுபதி தரப்பில் கோரிக்கை விடப்பட்டது .
இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மகா காந்தியை தாக்கியதாக விஜய் சேதுபதி மீது பதிவான கிரிமினல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் அவர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்தது. இதை அடுத்து தன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி விஜய் சேதுபதி இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தன் மீது இருக்கும் அவதூறு வழக்கு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.