தமிழ்நாடு காவல்துறைக்கு, ஜனாதிபதி சிறப்புக்கொடி அந்தஸ்து.. - வெங்கையா நாயுடு வழங்கினார்..

 
 தமிழக காவல்துறைக்கு , குடியரசுத் தலைவர் சிறப்புக்கொடி அந்தஸ்து..

தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி  அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.  சென்னையில் நடைபெற்ற  விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு பங்கேற்று சிறப்புக் கொடியினை வழங்கினார்.  

இந்தியாவில் 1856-ல் அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் தான் முதன்முதலில்  காவல் துறை உருவாக்கப்பட்டது.  காவல் துறையில் கைரேகைப் பிரிவு, தடய அறிவியல் பிரிவு, வயர்லெஸ் அமைப்பு, கடலோரக் காவல் படை என்று பல பிரிவுகள் என முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமைகளை உள்ளடக்கிய தமிழக காவல்துறை,  இந்திய காவல் துறையின் முன்னோடி எனப்பெயர் பெற்றது. தற்போது தமிழ்நாடு காவல்துறையில், 9 காவல் ஆணயரகங்கள்,  248 காவல் உட்கோட்டங்கள், மாநிலம் முழுவதும் 1,305 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து மற்றும் புலனாய்வு காவல் நிலையங்கள், 27 காவல் துறை புறக்காவல் நிலையங்கள் உள்ளன.  டிஜிபி, ஐஜி, டிஐஜி தொடங்கி இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும்  காவலர்கள் வரை  பல்வேறு துறைவாரியான பிரிவுகளின் கீழ்,  1 லட்சத்து 31 ஆயிரத்து 491  தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றுகின்றனர்.  

தமிழக காவல்துறை  - குடியரசுத் தலைவர் சிறப்புக்கொடி அந்தஸ்து

 இப்படியாக பல பெருமைகளைக் கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு , குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடியை வழங்கவேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து  அப்போதைய காங்கிரஸ் அரசு, 2009-ல் அதற்கான ஆணையை பிறப்பித்தது.   தமிழ்நாடு காவல் துறையின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் சில நிர்வாக காரணங்களால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாமல் போக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு அணிவகுப்பு நடத்தி தற்போது  கிடைத்துள்ளது. இந்த சிறப்புக்கொடி இந்தியாவில் இதுவரை 10  மாநில காவல் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  அதிலும் தென் இந்தியாவில் இந்த சிறப்பு அந்தஸ்தை பெறும் முதல் மாநிலம் தமிழகம் ஆகும்..

குடியரசுத் தலைவர் சிறப்புக்கொடி

தமிழ்நாடு காவல் துறைக்கு  குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடி அந்தஸ்து வழங்கும் விழா, பிரம்மாண்டமான முறையில்  சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.  இதில்  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.   இந்த விழாவில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ‘குடியரசு தலைவர் கொடியை’ துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு  தமிழ்நாடு காவல் துறைக்கு வழங்கினார்.   குடியரசு தலைவர் கொடியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு , அதனை  தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினார். இந்த விழாவில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.