காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிட மாட்டார் - வைரமுத்து..
காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிட மாட்டார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16ம் தேதி, மாட்டுப்பொங்கல் தினத்தன்று திருவள்ளுவர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர்கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் நாடு முழுவதும் ஆங்காங்கே உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு தலைவர்கள், கலைஞர்கள் பலர் மரியாதை செலுத்தினர். அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட அக்கட்சியினர், காவிநிற உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் சென்னை பெசன்ட் நகரில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடினர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து,
“பெசன்ட் நகரில்
திருவள்ளுவர் திருநாள்
கொண்டாடினோம்
பாடகர் உன்னி கிருஷ்ணன்
குறள் இசை வழங்கினார்
துணைவேந்தர் திருவாசகம்
உட்படத் தமிழன்பர்கள்
கலந்து கொண்டனர்
“கறுப்புச் சாயம் அடித்தால்
அன்னம் காகமாகி விடாது.
காவிச்சாயம் அடித்தால்
திருவள்ளுவர்
மதம் மாறிவிடமாட்டார்”
என்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.