திருப்போரூர் மற்றும் சின்ன சேலத்தில் இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள்!!
திருப்போரூர் மற்றும் சின்ன சேலத்தில் ரூ.2.11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நிதித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் 1 கோடியே 11 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் 1 கோடியே 4 ஆயிரத்து 606 ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேம்பட்ட நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் குறைக்கவும், மின் ஆளுமை (e-Governance) திட்டங்களை துரிதமாக செயல்படுத்தவும், விலை மதிப்புமிக்க முத்திரைத்தாள்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருட்களை பாதுகாக்கவும், ஓய்வூதியர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கவும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் (Drawing & Disbursing Officers) பட்டியல்களை துரிதமாக ஏற்பளிக்கவும், போதிய இடவசதியின்றி வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் கருவூல அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசால் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம், பொது மக்களுக்கும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் விரைவாக சேவை வழங்க வழிவகை ஏற்படும்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் 4305 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 11 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் 2680 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 4 ஆயிரத்து 606 ரூபாய் செலவிலும், கட்டப்பட்டுள்ள இரண்டு கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.