பாஜக சார்பில் நடைபெறும் கடையடைப்புக்கு ஆதரவு இல்லை - வணிகர் சங்க பேரமைப்பு..
கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம் எனவும், அக்.31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் கலந்துகொள்ள போவதில்லை என்றும் வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.
கோவை கார் சிலிண்டர் வெடி விபத்தை சுட்டிக்காட்டி, வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வரும் சூழலில், முழு அடைப்பு போராட்டம் அவசியமற்றது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 31-ல் நடைபெறும் பந்த்-ல் வணிகர்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.
இதற்கிடையே பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் சட்டவிரோதமானது என அறிவிப்பதுடன் தடை விதிக்க கோரி, வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடைகளை அடைத்து பந்த்துக்கு ஆதரவு தர வேண்டும் என பாஜகவினர் வியாபாரிகளை கட்டாயப்படுத்துவதாகவும், பந்த் நடத்துவது கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து அக்டோபர் 31-ல் நடைபெறும் கடையடைப்பில் வணிகர்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது. மேலும், பந்துக்கு ஆதரவு கோரி வியாபாரிகளை பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாகவும், ஆகையால் வணிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காவல் ஆணையரிடம் வணிகர் சங்க பேரமைப்பு மனு கொடுத்துள்ளது.