மறந்துடாதீங்க... நாளை கடைசி நாள் - தவறினால் ரூ. 5000 அபராதம்..

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். தவறினால் ரூ.5000 வரைஅபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கின் வழியாக மாதம் ஊதியம் பெறுவோரும், தொழிம் முனைவோரும், வருவாய் ஈட்டுவோரும் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மேல் பெறும் ஒவ்வொருவரும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். அதிலும் , ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் இல்லை. ஆனால் அதே ரூ.5 லட்சத்துக்கு மேல் அதிகமான வருமானம் இருந்தால் வரி விதிக்கப்பட்டு வருகிறது. முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்து விட்டால் , அவருக்கு அரசு சலுகைகளையும் வழங்கி வருகிறது.
மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கான விவரங்களை அதே ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இது வருமான வரித்துறையால் வழக்கமான பின்பற்றப்படும் நடைமுறையாகும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வருமான வரித் தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் 2021 - 2022 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31-ம் தேதியுடன் ( நாளையுடன்) முடிவடைகிறது. இதனையொட்டி பலரும் ஆர்வத்துடன் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பலரும், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் , ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமான வரிக்கணக்கிற்கு1000 ரூபாயும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரிக்கணக்கிற்கு 5000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.