31-வது நாளாகத் தொடரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம் - ஒருவர் தீக்குளித்து தற்கொலை

 
suicide

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச் சாவடியில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவில் ரோந்துபணியாளராக பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் இன்று தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு அருகேயுள்ள சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால், இவர் திருமாந்துறை சுங்கசாவடியில் ( TTPL ) தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவில் ரோந்து வாகனத்தில் உதவியாளராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  தீபாவளி பண்டிகை தினத்தன்று
கோபால் விடுப்பு கேட்டும் நிர்வாகம் தரமறுத்து விட்டதால் அவர் அனுமதி இன்றி விடுப்பு எடுத்ததாக தெரிகிறது.தீபாவளி முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய கோபாலிடம் மேற்பார்வை பணியிலிருந்த அலுவலர், செந்தில்குமார் உன்னை நிர்வாகம் ஒரு வார காலத்திற்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது என்று கூறி பணி வழங்க மறுத்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 

ஒரு வார காலம் முடிந்து இன்று கோபால் பணிக்கு வர இருந்த நிலையில் நிர்வாகம் உன் மீது விசாரணை நடத்த உள்ளது அதனால் விசாரணை முடிந்து நிர்வாகம் அனுமதித்தால் பணிக்கு வரலாம் என்று அவரிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர் இதனால் மன உளைச்சலில் இருந்த ஊழியர் கோபால் இன்று சு. ஆடுதுறை கிராமத்தையொட்டிய ஆற்று படுகையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீஸார் தற்கொலை செய்துகொண்ட ஊழியர் கோபாலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஊழியர் கோபால் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே கோபாலின் தந்தை முருகேசன் தனது மகன் மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொள்ள காரணமான TTPL நிறுவனத்தின் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வரும் மனோஜ், சிவசங்கர்.கருணாகரன், ராஜ்கிரன், செந்தில்குமார் மற்றும் சபியுல்லா ஆகிய 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக கோபால் மனைவி முனியம்மாள், கோபாலின் தந்தை முருகேசன் மற்றும் TTPL நிறுவன அதிகாரிகள் ஆகியோரிடம் மங்களமேடு போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.