இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை - திருமகன் ஈவெரா மறைவிற்கு இரங்கல் தீர்மானம்!!
நடப்பாண்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை ஆளுநர் படிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்த நிலையில் ஆளுநர் சட்டப்பேரவை கூட்டம் முடிவதற்கு முன்பாகவே சபையில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. வருகிற 13-ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா, தமிழறிஞர் நெடுஞ்செழியன் , திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ் , தமிழறிஞர் அவ்வை நடராஜன், கால்பந்து வீரர் பீலே உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு , பின் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளையும், நாளை மறுதினமும் விவாதம் நடைபெறும். வருகிற 13-ஆம் தேதி விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்க உள்ளார்.
இந்த சூழலில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படும் வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.