“பேரறிஞர் அண்ணாவுக்கு பெருமை சேர்க்கவே, தம்பி என்ற பெயர்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று விழாவினை தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விளக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றன. இதை பார்வையாளர்கள் வெகுவாக கண்டுகளித்தனர்.
இதை தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா எழுச்சியுடன் நடைபெற்றிருக்கிறது. சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும். நான்கே மாதங்களில் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விளையாட்டுத்துறை மட்டுமல்ல சுற்றுலாத்துறையும் மேம்பாடு அடையும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, முதலமைச்சராக இருந்தபோது 20,000 பேர் பங்கேற்ற செஸ் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், செஸ் குதிரைக்கு தம்பி என்று பெயர் வைத்தது பற்றி குறிப்பிட்டார். அதில் செஸ் ஒலிம்பியாட் தொடரின் சின்னமாக தமிழர் பாரம்பரிய உடையில் குதிரை வணக்கம் சொல்வது போல வடிவமைத்து அதற்கு தம்பி என பெயரிட்டோம். தம்பி என்று சொல்லானது சகோதரத்துவத்தை குறிக்கும் . தமிழினத்தின் மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அனைவரையும் தம்பி என அழைப்பார் . அண்ணாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே சின்னத்திற்கு தம்பி என பெயர் வைக்கப்பட்டது.செஸ் விளையாட்டு இந்தியா முழுவதும் பரவச் செய்யும் விதமாக செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.