வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு.. - தமிழக அரசு அரசாணை..
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும். ஜனவரி மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அதிக பாதிப்பை சந்திக்கும். ஆகையால் 2022-2023ம் ஆண்டின் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். பருவமழையை ஒட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீர்நிலைகள், கால்வாய்கள் வழியாக மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்த நிது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையின் முக்கிய நீர் வழிகளான, கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நூறு மற்றும் விருகம்பாக்கம் கால்வாய், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்று வாய்க்கால் மற்றும் வெள்ள நீர் கால்வாய்கள் நீர்வளத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் முக்கிய வாய்க்கால்களில் திடக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால், வெள்ளம், தொற்றுநோய்கள் பரவுதல், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை தடுக்க, தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயனபடுத்தி நீர் வழிகளில் உள்ள குப்பைகள், வண்டல் மண், களைகள், அடைப்புகளை அகற்ற வேண்டும் என்றும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், வெள்ளம் ஏற்படாமல் இருக்கவும், வெள்ளத்தை நிர்வகிக்கவும், நீர் வழிகளில் தங்கு தடை இன்றி நீர் ஓட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, பருவமழைக்கு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது அவசியம் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.