விநாயகர் சிலை ஊர்வலம் - சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

 
police

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் 31-ந்தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  இந்த சிலைகள்  இன்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய கடற்கரை ஆகிய இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிலைகளை கரைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

vinayagar

இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.  விநாயகர் சிலைகள் புறப்படும் இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரையில் போலீசார் உடன் சென்று பாதுகாப்பு அளிக்கின்றனர். விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்படும் வாகனத்துடன் போலீஸ் வாகனம் ஒன்றும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பாதைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை கரைக்கும்போது கடலில் யாராவது மூழ்கி விட்டால் அவரை காப்பாற்றுவதற்கு ஏதுவாக பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களும் தயாராக உள்ளனர்.