இது கோயில்.. இறுதி மூச்சு உள்ளவரை போக மாட்டேன்.. - ரூபி மனோகரன் பேட்டி..

 
ரூபி மனோகரன்

காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன் என்றும், உயிருள்ளவரை காங்கிரஸிலேயே இருப்பேன் என்றும்  ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கடந்த நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற    நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது , காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  கட்சிக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி அடிதடி ஏற்பட்டு 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இந்த அசம்பாவிதங்களுக்கு ரூபி மனோகரன் தான் காரணம் என்று கூறி 62 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.

காங்கிரஸ்

இதனையடுத்து   ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு  நடவடிக்கை குழு தலைவர் கே. ஆர். ராமசாமி , விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த வாரம் நோட்டீஸ்  அனுப்பியிருந்தார். இந்நிலையில் நேற்று, காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி காலையில் அறிவித்தார். ஆனால், மாலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.   இந்நிலையில் இது தொடர்பாக நெல்லையில்  ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ரூபி மனோகரன்

அப்போது;, “ இடைக்கால நீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றி. காங்கிரஸ் கட்சி பலமாக செல்கிறது என்பதற்கு உதாரணம் தான் இது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்ற போய் நிரூபணம் ஆகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தான் என் தெய்வம் எனது குடும்பம். காங்கிரஸ் கட்சிக்காக எனது வாழ்க்கையை ஒப்படைத்து விட்டேன். இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன்.  ராகுல் காந்தியின் நடைபயணம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் பண்புடைய தலைவர் தலைமை பொறுப்பில் உள்ளார். காங்கிரஸில் இனி தவறு நடக்காது ; பழைய சம்பவங்களை மறக்க வேண்டும். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.” என்று கூறினார்.