கிருஷ்ணர் சொன்னதைத்தான் திருவள்ளுவரும் சொன்னார் - எச்.ராஜா
நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு அரசியல் சாசனம் தான் காரணம் என்று பலரும் சொல்லி வரும் நிலையில் நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு சனாதான தர்மம் தான் காரணம் என்று சொல்கிறார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.
இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் திமுக எம்பி ஆ. ராசா அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னும் அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் எச். ராஜா . அப்போது அவர், இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை. இந்து மதம் தானாக உருவானது என்றார். அவர் மேலும் அது குறித்து, கிருஷ்ண பரமாத்மா எதைச் சொன்னாரோ அதைத்தான் திருவள்ளுவரும் சொன்னார் என்றார்.
ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு, இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருப்பது அம்பேத்கர் வடிவமைத்த சட்டம் தான். ஆனால் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் அரசியலமைப்பு சட்டம் அல்ல சனாதன தர்மம் தான். சனாதன தர்மம் தான் அனைவரும் ஒற்றுமையாக வைத்திருக்கின்றது. இந்த சனாதன தர்மத்தை பற்றி பேசும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆ. ராசா தவறாக பேசியிருக்கிறார்.
இந்துக்களுக்கு கடவுள் பக்தி இருக்கக் கூடாது என்று நினைப்பவர் ராசா. சனாதன தர்மத்தில் இந்துக்கள் சூத்திரர்கள் என்று சொல்லவே இல்லை. ஆனால் இதைப்பற்றி ஆ. ராசா தொடர்ந்து பொய்யாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். மேலும், பெரியாரின் உளறல்களை வைத்துக்கொண்டு இந்து மதத்தை இழிவு படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. ஆகவே, ஆராசாவே காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.